WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, January 16

பக்கத்து வீட்டுப் பொங்கல்.......

வந்துவிட்டது பொங்கல். எல்லா பொங்கலுக்கும் பல் வலிக்க வலிக்க கரும்பைக் கடித்துச் சுவைப்போம். அம்மா தரும் சர்க்கரைப் பொங்கலோ அதைவிடவும் இனிப்பாக இருக்கும். இந்த இனிப்புகள் நம் மனதில் இருந்து நீங்காமல் தங்கியிருக்கும். அதுதான் பொங்கல்.
பொங்கல் எனும் அறுவடைத் திருவிழா தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாக்கள் அனைத்தும் ஒரே காலத்தில் கொண்டாடப்படுவது முக்கியமானது. சரி, மற்ற மாநிலங்களில் அறுவடைத் திருவிழாக்களை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?
போகாலி பிஹு (அசாம்)
அசாம் மாநிலத்தில் பிஹு என்ற பண்டிகை ஆண்டில் மூன்று முறை கொண்டாடப்படுகிறது: போகாலி பிஹு (ஜனவரி), போஹாக் பிஹு (ஏப்ரல்), கொங்காலி பிஹு (அக்டோபர்). இதில் போகாலி பிஹுவின்போது, கொண்டாட்டத்தின் அடையாளமாக மரங்களில் மூங்கில் துண்டு அல்லது நெற்கதிர்களை வைத்துக் கட்டுவார்கள்.
ஆற்றங்கரையை ஒட்டிய வயல் பகுதியில் வைக்கோலில் ஒரு தற்காலிக கூரையை வேய்து, பக்கத்தில் நெருப்பு மூட்டி உணவு சமைத்து கூட்டாகச் சாப்பிடுவார்கள். பிறகு இரவு முழுவதும் பாடல்களைப் பாடி மகிழ்ந்துவிட்டு, அடுத்த நாள் காலையில் நெருப்புக் கடவுளை வணங்குவார்கள்.
லோஹ்ரி (பஞ்சாப்)
பஞ்சாப்பில் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் விழா லோஹ்ரி. மாலையில்தான் இந்த விழா களைகட்டும். அப்போது வயல்களில் நெருப்பு மூட்டி, 5 முறை வட்டமடித்து நடனம் ஆடி அறுவடை செய்த தானியங்கள், பொரி ஆகியவற்றை தீயில் இடுவார்கள்.
நெருப்புக் கடவுளை வணங்கி, நாட்டுப்புற பாடல்களைப் பாடுவார்கள். பஞ்சாபியர்களின் புகழ்பெற்ற பாங்க்ரா நடனம் இதன் முக்கிய அம்சம். பிறகு, பல தானியங்கள் சேர்த்த சப்பாத்தி, வெந்தயக் கீரை கூட்டு செய்து சாப்பிடுவார்கள்.
பட்டம் விடும் திருவிழா (குஜராத்)
குஜராத்தில் உத்தராயண அறுவடைத் திருவிழா மூன்று நாட்களுக்கு நடைபெறும். அப்போது எல்லோரும் சின்னக் குழந்தைகளைப் போல மாறி பட்டம் விட ஆரம்பித்துவிடுவார்கள். வானமே வண்ணத் தோரணம் கட்டியது போலாகிவிடும்.
மாலையில் பட்டங்களுடன் மெழுகுவர்த்தியையும் ஒட்டிவைத்து அனுப்புவார்கள். வண்ணத் தோரணங்கள் எல்லாம் தீபத் தோரணம் ஆகிவிடும். அம்மாக்கள் பொரிஉருண்டை, கிச்சடி செய்து பட்டம் விடும் மாடிப் பகுதிகளுக்குச் சென்று விடுவார்கள். அங்கேதான் சாப்பாடு.
சுக்கி (கர்நாடகம்)
கர்நாடக அறுவடைத் திருவிழாவின் முக்கிய அம்சம் எள்ளுருண்டை. அத்துடன் சர்க்கரை அச்சு எனப்படும் இனிப்பு, கரும்பை தட்டில் வைத்து வழிபடுவார்கள். இந்த இனிப்பை பெண் குழந்தைகள் பக்கத்து வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுப்பார்கள்.
"இனிப்பைச் சாப்பிட வேண்டும். நல்லதே பேச வேண்டும்" என்பது கன்னட பொங்கல் பழமொழியாம்.

Tuesday, January 13

வைப்பு நிதி... தொழிலாளியின் கைப்பு நிதி...!

மாநிலச்சங்கங்கள் 
முதன்மைப்பொது மேலாளரிடம் முறையிட்டு விட்டன..
அகில இந்தியச்சங்கங்கள்...
CMDயிடம் சிரமங்களைச் சொல்லி விட்டன..
இனி மிச்சமிருப்பது ஐநா சபை மட்டுமே...

கிறிஸ்துவர்களை தவிக்க விட்டது...

புத்தாண்டுப் பிரியர்களை புலம்ப விட்டது..
மீலாது விழாவிலும்..மீளாது நின்று விட்டது...
இனி... சங்கத்தமிழன்... மட்டுமே  பாக்கி...
ஜனவரி 15...
பானைகள் பொங்குமோ? 
பாழும் மனசுகள்..  பொங்குமோ?

தைப்பிறந்தால் வழி பிறக்கும்... என்பது பழமொழி..

தைக்கு முன்னே வைப்பு நிதி பிறக்குமா? 
என்பதே நமது தோழர்களின் கவலை மொழி...

நாளைக்குள் பிறந்தால் நன்று...

இல்லையேல்...
வைப்பு நிதி... தொழிலாளியின் 
கைப்பு நிதியாகிவிடும்...
                                                           செய்தி ;காரைக்குடி வலைத்தளம் 

Friday, January 9

இணையற்ற எரிபொருள் வளம் மீத்தேன் வாயு: நாட்டின் வளர்ச்சியா? வாழ்வாதாரமா?



தமிழகத்தின் நெற்களஞ்சியம் காவிரி டெல்டா பகுதி. தமிழகத்தின் மொத்த அரிசி உற்பத்தியில் 40 சதவீதம் இப்பகுதியில்தான் விளைகிறது. விவசாயத்தின் இதயமாக திகழும் இப்பகுதியில் மீத்தேன் எடுக்கப்போவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, கடந்த 4 ஆண்டுகளாக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதை எதிர்த்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனம் தனது தஞ்சை அலுவலகத்தை கடந்த மாத இறுதியில் காலி செய்துவிட்டது.
மீத்தேன் வாயு திட்டம் உண்மையில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமா? அதை விவசாயிகள் எதிர்ப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. இதற்கு விடை காண இத்திட்டத்தின் முழு அம்சங்களையும் அலசுவதே சரியாக இருக்கும்.
மீத்தேன் உருவாவது எப்படி?
பல்வேறு இயற்கை பேரழிவுகளால் காடுகள் அழியும்போது, அவை மண்ணில் புதைகின்றன. அதிக வெப்பம், மேற்பரப்பில் ஏற்படும் படிமங்களின் அழுத்தம், வேதியியல் மாற்றங்கள் ஆகியவற்றால் அவை நிலக்கரியாக மாறுகின்றன. இந்த மாற்றங்களின்போது வெளியாகும் மீத்தேன் வாயு நிலக்கரியுடன் இணைந்து பூமிக்கடியில் சிக்கிக் கொள்கிறது. இதை வெளியில் எடுப்பதே மீத்தேன் வாயு உற்பத்தியாகும்.
மீத்தேன் வாயுவுக்கு நிறம் மற்றும் வாசனை கிடையாது. இந்தியாவில் 710- 948 பில்லியன் கன மீட்டர் மீத்தேன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், 33 மீத்தேன் உற்பத்தி சுரங்கங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால், பயோடீசல், இயற்கை எரிவாயு (மீத்தேன்), புரோபேன், ஹைட்ரஜன் ஆகியவை சுற்றுச் சூழலுக்கு குறைந்த கேடு விளைவிக்கும் எரிபொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில், மீத்தேன் எரிவாயு பெட்ரோலைவிட விலை குறைந்ததாக உள்ளது.
மீத்தேனை எடுப்பது எப்படி?
பூமியின் மேற்பரப்பில் இருந்து அதிக ஆழத்தில் நிலக்கரி படிமங்கள் புதைந்திருக்கும். அதில், செங்குத்தாகவும், படுக்கைவசமாகவும் துளை அமைக்கப்பட்டு அதிலுள்ள நீர் வெளியே உறிஞ்சப்படும். இதனால், நிலக்கரி படிமங்கள் மீதான அழுத்தம் குறையும்போது, அதிலுள்ள மீத்தேன் வாயு அதற்கென அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் வழியாக வெளியேறும். அதிக வேகத்தில் நீர் உட்செலுத்தப்படுவதன் மூலம் மீத்தேன் வெளியேற வழிவகை செய்யப்படும். அவ்வாறு வெளிவரும் மீத்தேன் வாயு, குழாய்கள் மூலம் எரிவாயு முனையங்களுக்கு அனுப்பப்படும்.
எதற்காக எடுக்கப்படுகிறது?
சுரங்கம் தோண்டுவதற்கு முன்பாக அங்குள்ள மீத்தேனை வெளியில் எடுத்தால், வெடி விபத்து ஏற்படும். மீத்தேன் வெளியேறி, சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும். மீத்தேன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துவதும் மற்றொரு நோக்கம். இதன் அடுத்தகட்டம் அப்பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதாகும்.
உலகில் முன்னாள் சோவியத் யூனியன் பகுதி, மேற்கு கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளே அதிக மீத்தேன் வளத்தை கொண்டுள்ள நாடுகளாக கணக்கிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 1950 ஆம் ஆண்டு முதல் மீத்தேன் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் 1992 ஆம் ஆண்டு முதல் மீத்தேன் எடுக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 143 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) கன மீட்டர் மீத்தேன் பூமிக்கடியில் இருப்பதாக 2006-ல் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு டிரில்லியன் கன மீட்டர் மட்டுமே வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
உலகில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 182 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. நிலக்கரி உற்பத்தியிலும், இறக்குமதியிலும் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. 613 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. 178 மெட்ரிக் டன் இறக்குமதி செய்கிறது. நிலக்கரி வளம் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது.
நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாற்று எரிபொருளை உற்பத்தி செய்வதில் இந்தியா ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நம் நாட்டிலேயே கிடைக்கும் இயற்கை வளமான மீத்தேனை வெளியில் எடுத்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஹரியானா மாநிலம், குர்கானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள துபாயைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஜிஇஇசிஎல் நிறுவனத்துக்கு மீத்தேன் வாயு எடுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் மீத்தேன் எரிவாயு தயாரிப்பு நிறுவனம் ஜிஇஇசிஎல். தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் காவிரி டெல்டா படுகையில் 667 சதுர கிமீ (1,66,210 ஏக்கர்) அளவில் மீத்தேன் எடுக்க கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2010-ல் அனுமதி அளித்தது.
தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திமுக அரசு லைசென்ஸ் வழங்கியது. இத்திட்டத்தை செயல்படுத்த 2012 ஆம் ஆண்டு செப். 12 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிறுவனம் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச் பகுதியிலும் மீத்தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ராணிகஞ்ச் பகுதியில் இருந்து இந்நிறுவனம் தற்போது 0.5 எம்எம்எஸ்சிஎம்டி எரிவாயு தயாரித்து வருகிறது. ஒரு எம்எம்எஸ்சிஎம்டி எரிவாயுவால் 242 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். எரிவாயு விலை முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. ராணிகஞ்சில் தயாரிக்கப்படும் எரிவாயு விலை யூனிட்டுக்கு 6.79 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மீத்தேனை குழாய்கள் மூலம் ஐஓசிஎல், பிபிசிஎல் எரிபொருள் நிலையங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். அந்நிறுவனங்கள் தங்கள் கமிஷனை எடுத்துக் கொண்டு, மீத்தேனை விற்பனை செய்யும். இதற்கான சந்தை விலை உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
30 கிணறுகள்
மன்னார்குடி பகுதியில் நிலத்தடி நீருக்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழத்தில் நிலக்கரிப் படுகை உள்ளது. இப்பகுதியில் 30 மீத்தேன் கிணறுகளையும், 50 ஆழ்துளை குழாய்களையும் ஏற்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 3500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சராசரி விலை ஒரு யூனிட்டுக்கு ரூ. 21.56 ஆக உள்ளது.
ஹைட்ரோ கார்பன் இயக்குநர் ஜெனரல் அறிக்கைப்படி, காவிரிப் படுகையில் 0.98 டிசிஎப் மீத்தேன் வாயு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2013-ஆம் ஆண்டு ஜூலையில் இத்திட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. ஆனால், இக்குழு அமைப்பதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இக்குழு அறிக்கை அளிக்கும் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
என்ன பாதிப்பு?
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கிபி 2 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பாசனக் கால்வாய்களை கொண்டுள்ளன. இவை பாதிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. மீத்தேன் எடுக்கும் பணியின்போது, ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மணிக்கு 100 கேலன் அளவு தண்ணீர் செலுத்தப்படும். பின்னர் உறிஞ்சும்போது மீத்தேன் வெளியேறும்.
இத்திட்டம் நிறைவேறினால், நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே போய்விடும். குளோரைடு, சோடியம், பைகார்பனேட் உள்ளிட்டவை நீரில் கலந்து வெளியேறும். கதிர்வீச்சு பாதிப்பு உண்டாகவும் வாய்ப்பு உண்டு. ஒரு கிணறு ஆண்டுக்கு தலா 20 டன் உப்பை வெளியேற்றும். நிலத்தடி நீரில் உப்பு மற்றும் சோடியம் படிவதால் விவசாய நிலம் பாதிப்படையும். வெளியேற்றப்படும் கழிவுநீர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மீத்தேனை வெளியில் எடுக்கும் கிணறுகளில் இருந்து இவ்வாயு கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது, ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்யும் வாயுக்களில் ஒன்று. வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற மீத்தேன் வாயுக் கசிவு பெரும் பிரச்சினையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடல்நீர் உள்ளே நுழையும்
1970-களில் நடந்த ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் (யுஎன்டிபி) ஆய்வில் பங்கெடுத்தவர் நீர்வள ஆராய்ச்சியாளர் நடராஜன். அவர் கூறும்போது, ‘காவிரி டெல்டா படுகையில் உள்ள நிலத்தடி நீரின் அளவு 4.77 டிஎம்சி. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 2.03 டிஎம்சி அடி நீர் வெளியில் உறிஞ்சப்படும் என்று அஞ்சப்படுகிறது. இத்திட்டம் 25 ஆண்டுகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 50.63 டிஎம்சி அடி நீர் வெளியில் உறிஞ்சப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 5 ஆண்டுகளில் மொத்த நீரும் உறிஞ்சப்படும். இதனால், கடல்நீர் உள்ளே புகுந்து விளை நிலத்தை தரிசாக்கும்.
அலுவலகத்தை காலி செய்தது
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜிஇஇசிஎல்) பிரதிநிதி கடந்த ஆண்டு தஞ்சையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, ‘தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் மூலம் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாமல் மீத்தேனை உறிஞ்ச முடியும்’என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது வாக்குறுதியை நம்ப விவசாயிகள் தயாராக இல்லை. விவசாயிகள் தொடர்ந்து அளித்துவரும் நெருக்கடியால் இந்நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி தஞ்சை அலுவலகத்தை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டது. இந்நிறுவனத்துடன் தமிழக அரசு போட்ட ஒப்பந்தம் கடந்த 4 ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. இருந்தாலும், இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்நுட்பம்
இதுபோன்ற போராட்டங்களால் இந்தியாவின் வளர்ச்சித் திட்டம் ஒன்றை நிறுத்தி விடுகிறோமோ என்ற அச்சம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக சுரங்கத் துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
எரிபொருள் தேவைக்கு திண்டாடி வரும் இந்தியாவுக்கு இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானதுதான். நிலத்தின் மேற்பரப்பை பாதிக்காத வகையில், மீத்தேன் வாயுவை மட்டும் வெளியில் எடுக்கத் தேவையான உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மொத்த விவசாய நிலத்தையும் பயன்படுத்த தேவையில்லை. ஆழ்துளை கிணறு அமைக்க தேவையான இடம் இருந்தாலே மீத்தேன் வாயு குழாய் அமைத்துவிடலாம். அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை பயன்படுத்துவார்கள். அதன்பிறகு நிலத்தை விவசாயிகளிடமே திருப்பிக் கொடுத்து விடலாம்.
தரைக்கு கீழ் 500 மீட்டர் ஆழத்தில் குழாய் அமைக்கும்போது நிலத்தடி நீரும் பாதிக்காது; நிலத்தின் மேற்பரப்பும் பாதிக்காது. என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீத்தேன் வாயு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, பாதிப்புகளை கவனத்தில் கொள்ள முடியும். விவசாய நிலத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் மீத்தேன் எடுக்க அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் நவீனயுகத்தில் உண்டு. கடல் நீர் உள்ளே வரும் என்ற அச்சம் இருந்தால், அதற்கு தடுப்புச் சுவர் அமைக்க முடியும். வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற முடியும். விவசாய நிலத்தில் உற்பத்தி நிலையங்கள் எதுவும் அமைக்காமல் குழாய் மூலம் தொலைவாக வாயுவை எடுத்துச் சென்று அங்கு உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 5 முதல் 6 ஆழ்துளை குழாய்களை அமைக்க முடியும்.
மீத்தேன் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனம் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்புண்டு. அரசுக்கும் ராயல்டி தொகை மற்றும் வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி கொடுப்பதுடன், அந்த நிலத்தின் விலையில் 10 மடங்கு அதிகம் அளிப்பதற்குக்கூட தயங்கமாட்டார்கள். அனைத்து தரப்புக்கும் லாபம் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும். இதைச் செய்ய வேண்டியது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பொறுப்பாகும். அவர்களை பொறுப்புடையவர்களாக ஆக்கி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மீத்தேன் வாயு திட்டத்தின் எதிர்ப்பாளரும், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர். பாண்டியன் இதுகுறித்து கூறியதாவது:
இத்திட்டத்தை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கில் ஜிஇஇசிஎல் நிறுவன பிரதிநிதிகள் ஒருமுறைகூட ஆஜராகவில்லை. வழக்கு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.
மீத்தேன் வாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால்தான் நாட்டின் வளர்ச்சி இருக்கும். மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு ஒரு நாடு எப்படி வளர முடியும்? இத்திட்டத்தால் நிலத்தடி நீர் பாழாகும். விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்துபோகும் என்று பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து விட்டனர்.
நிலக்கரிதான் குறிக்கோள்
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் மீத்தேன் வாயு மட்டுமல்ல. தஞ்சை டெல்டா பகுதியில் இருந்து நெய்வேலி வரை நிலக்கரி படிமங்கள் உள்ளன. தஞ்சையில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். மீத்தேன் வாயுவை எடுக்காமல் சுரங்கம் அமைக்க முயற்சித்தால் வெடிவிபத்து ஏற்படும். எனவே, முதற்கட்டமாக மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் என்று ஆரம்பிக்கின்றனர். மத்தியில் உள்ள பாஜக அரசும் பன்னாட்டு நிறுவனங்களின் சேவை ஆளாகவே செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்ப்போம் என்றார்.

Thursday, January 8

விண்வெளியில் 8 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு : உயிர்வாழும் சூழலுடன் பூமிபோல் 2 கிரகங்கள்...

விண்வெளியில் 8 புதிய கிரகங்கள் சுற்றிக் கொண்டிருப்பதை, நாசா விஞ்ஞானிகள் கெப்லர் விண்கலத்தின் தொலை நோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர். இதில் தண்ணீர் இருக்கலாம் என்பதால் உயிர்வாழும் சூழலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதில் 2 கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டவெளியில் உள்ள பூமியைப் போல் எவ்வளவு கிரகங்கள் உள்ளன, எத்தனை கோடி  நட்சத்திரங்கள் உள்ளன என்பது பற்றி கணக்கெடுக்க, விண்வெளி தொலை நோக்கியுடன் கூடிய ‘கெப்லர்’ விண்கலத்தை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா விஞ்ஞானிகள் கடந்த 2009ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பினர். 

இதில் உள்ள போட்டோ மீட்டர் நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளவிடுகிறது. இந்த விண்கலம் ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும் தகவல்களை நாசா விஞ்ஞானிகள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.  கெப்லர் விண்கலம் மூலம் அண்டவெளியில், ‘கோல்டிலாக்ஸ்’ என்ற பகுதியில் 8 புதிய கிரகங்கள் அதன் நட்சத்திரங்களை சுற்றிக் கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் தண்ணீர் இருக்கலாம் என்பதால், உயிர் வாழும் சூழலுக்கு வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இவற்றில் கெப்லர் 438பி, கெப்லர் 442பி என பெயரிடப்பட்ட 2 கோள்கள் கிட்டத்தட்ட பூமியைப்போல் உள்ளது. இவை இரண்டும் சிவப்பு நிற நட்சத்திரங்களை சுற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் சூரியனை விட சிறியதாகவும், சற்று வெப்பம் குறைந்ததாகவும் உள்ளன. கெப்லர் 438பி என்ற கோள் அதன் நட்சத்திரத்தை சுற்றி வர 35 நாட்கள் ஆகிறது. இது பூமியை விட 12 சதவீதம் பெரிதாக உள்ளதாகவும், இதில் 70 சதவீதம் பாறைகள் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். கெப்லர் 442பி கோள் அதன் நட்சத்திரத்தை ஒரு முறை சுற்ற 112 நாட்கள் ஆகிறது. இது பூமியைவிட மூன்றில் ஒரு பங்கு பெரிதாக இருக்கிறது. இதில் 60 சதவீதம் பாறைகள் இருக்க வாய்ப்புள்ளது. 

இந்த கிரகங்கள் உயிர்வாழும் சூழலில் இருக்கவேண்டும் என்றால், பூமி பெறும் சூரிய ஒளி அளவுக்கு, அதன் நட்சத்திரங்களில் இருந்து ஒளியை பெற வேண்டும். அதிக ஒளியை பெற்றால் அதில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடும். குறைந்த ஒளியை பெற்றால், தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறிவிடும்.  கெப்லர் 438பி கோள், பூமியை விட 40 சதவீத ஒளியை கூடுதலாக பெறுகிறது. இதில் உயிர்வாழ்வதற்கு 70 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  கெப்லர் 442பி கோள், பூமியைவிட 2/3 பங்கு ஒளியை கூடுதலாக பெறுகிறது. இதில் உயிர்வாழ்வதற்கு 97 சதவீத வாய்ப்புகள் உள்ளதாம். இது குறித்து ‘ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மையத்தின் தலைவர் டாரஸ் கூறுகையில், ‘‘எங்கள் கணக்குப்படி இந்த கிரகங்களில் உயிர் வாழும் சூழலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’’ என கூறியுள்ளார். இந்த மையத்தின் மற்றொரு பேராசிரியர் டேவிட் கிப்பிங் கூறுகையில், ‘‘இதே போல் எத்தனை கிரகங்கள் உயிர் வாழும் சூழலில் உள்ளன என்பது எங்களுக்கு தெரியாது’’ என்றார்.   இந்த கிரகங்களுடன் சேர்த்து கெப்லர் விண்கலம், இதுவரை ஆயிரம் கிரகங்களை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, January 3

PAY SLIP - print எடுப்பது எப்படி?

 http://eportal.erp.bsnl.co.in/irj/portal என்ற இணைய தளத்துக்கு செல்லவும்!

SAP Net Weaver என்ற ஒரு window வரும்.
அதில் user ID என்ற இடத்தில்  அவரவர் HRMS எண்ணில் 1 -ஐ விட்டுவிட்டு type செய்யவேண்டும்.. (எ.கா. 98600629)
password என்ற இடத்தில bsnltn@123 என type செய்யவேண்டும்
உடனே password  -ஐ  மாற்றவும் ( மறக்காமல் எழுதிவைத்து கொள்ளவும்)

Benefits and Payments -ஐ கிளிக் செய்யக.
Salary statement - ஐ கிளிக் செய்யக.
Show overview  - ஐ கிளிக் செய்யக.
    தற்பொழுது payslip தெரியும் . அதை print எடுத்துகொள்ளலாம்.