WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, August 8

பொது வாழ்வில் நேர்மை, தூய்மை அவசியமன்றோ !


பாரம்பரியமிக்க தமிழக NFTE-BSNL மாநில சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் தோழர் H.நூருல்லா அவர்களின் மீது ஊழல், சங்க நிதியை கையாள்வதில் முறைகேடு செய்ததாக சேலம் மாவட்டதிலிருந்து  முக்கியமான தோழர் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டை அச்சில் அடித்து வெளியிட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றோம்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்ற நீதிக்கு ஏற்ப, தமிழ் மாநில சங்கத்தின் பெருமைமிகு மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள தோழர் நூருல்லா, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தானே முன்வந்து உரிய விளக்கங்களை அளித்தால் அவர் வகிக்கும் பதவியின் மாண்புக்கு பங்கம் வராமல் தடுத்திட இயலும் என்று நம்புகிறோம்.

மாவட்ட சங்கத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தில் பாதியை தனது மகன் பெயரில் பத்திர பதிவு செய்துவிட்டு மீதியை  சங்கத்தின் பெயரில் பதிவு செய்ததாக அந்த நோட்டீசில் குற்றச்சாட்டப் பட்டுள்ளது. தனது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த பாதி நிலத்தை பின்னாளில் விற்று காசாக்கி விட்டதன் மூலம்  சுமார் 15 லட்சம் ரூபாய் லாபமடைந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர கடந்த பல ஆண்டுகளாக ஊழியர்களிடம்  கோவை மாநில மாநாட்டிற்காகவும் வேறு சமயங்களிலும் வசூலித்த நன்கொடைகளுக்கும், காண்ட்ரேக்ட் ஊழியர்களிடம் வசூலித்த தொகைக்கும் கணக்கு  எதையும் காட்டியதாக வரலாறே இல்லை என்றும் .வரவு செலவு கணக்கு என்பதே அவர் சொல்வதுதான் என்ற அவல நிலை அம்மாவட்டத்தில் நிலவுவதாக  சேலம் தோழர்கள் குமுறுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 

கடலூரில் நடக்காத முறைகேட்டிற்கு விசாரணைக்குழு அமைத்த மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன், அவருடைய மாநிலத்  தலைவர், சேலம் மாவட்டத்தில் பெரும் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருப்பது கண்டு மௌனம் சாதிப்பது ஏனோ ?

மாநிலத் தலைவரின் மீது கூறப்பட்டுள்ள மோசடி புகார் குறித்து விசாரிக்க உடனடியாக ஒரு நடுநிலையான, நம்பகத்தன்மை கொண்ட விசாரணைக் குழுவை மாநிலச் செயலர் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

  மாநிலத் தலைவர் நூருல்லா அவர்களும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள  மோசடி புகார் மீதான விசாரணை முடியும் வரை அவர் வகிக்கும் தலைவர் பதவியிலிருந்தும், சேலம் மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்தும் விலகி நின்று ஒரு சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்பதே நியாயமான அணுகுமுறையாக இருக்கும்.

  ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஏன், நிர்வாகத்தின் ஊழல் பற்றி வெளிச்சம் போட்டு காட்டும் தொழிற்சங்கம், தன்னிடத்தில் எழும் முறைகேடுகளை மூடி மறைத்திட முயன்றால், தொழிற்சங்கத்தின் மீதான நம்பகத்தன்மை கெட்டுவிடும் அல்லவா ?
                  
            ஆகவே மாநிலச் செயலர் உடனே நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் !
                                              செய்தி ....கோவை வலைத்தளம்

No comments:

Post a Comment