WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, September 19

நேதாஜி ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு........

கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநகரக் காவல் துறை ஆணையர் சுரஜித் கர் புரகயாஸ்தா.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
 மத்திய அரசிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மேற்கு வங்க அரசு தன்னிடம் இருந்த ஆவணங்களை வெளியிட்டிருப்பது இந்த பிரச்னையின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
 நேதாஜி தொடர்பாக மேற்கு வங்க உள்துறையிடம் இருக்கும் 64 ரகசிய ஆவணங்களும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 11ஆம் தேதி அறிவித்திருந்தார்.
 அதன்படி, கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்கள் முன்னிலையில் அந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
 நிகழ்ச்சியில் கொல்கத்தா மாநகர காவல் துறை ஆணையர் சுரஜித் கர் புரகயாஸ்தா கலந்து கொண்டு, நேதாஜியின் உறவினர்களிடம் கணினிமயமாக்கப்பட்ட நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் கொண்ட டி.வி.டி.யை வழங்கினார்.
 கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டகத்தில் அந்த 64 ஆவணங்களும் தற்போது வைக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள்கிழமை முதல் அந்தக் ஆவணங்களைப் படித்துப் பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையர் சுரஜித் கர் தெரிவித்தார்.
 64 ஆவணங்களில் 55 ஆவணங்கள் கொல்கத்தா மாநகர போலீஸாரிடமும், எஞ்சிய 9 ஆவணங்கள் மாநில காவல் துறையிடமும் இருந்தன. கோப்புகளில் மொத்தம் 12 ஆயிரத்து 744 பக்கங்கள் உள்ளன.
 நேதாஜியின் குடும்பத்தினர் வரவேற்பு:
 நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டிருப்பதை அவரது குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.
 இதுகுறித்து நேதாஜியின் பேரன் சந்திர போஸ் கூறியதாவது:
 இது மிகவும் சரியான நடவடிக்கை; மத்திய அரசும் தன்னிடம் இருக்கும் 130 ரகசிய ஆவணங்களையும் வெளியிட வேண்டும். அந்த ஆவணங்களை கடந்த 70 ஆண்டு காலமாக ரகசியமாக வைத்திருந்து நாட்டு மக்களுக்கு சில தலைவர்கள் துரோகமிழைத்து விட்டனர். அந்தத் தலைவர்களை அம்பலப்படுத்தும் வகையில், ரகசிய ஆவணங்களை வெளியிடுவது மத்திய அரசின் கடமையாகும் என்றார் சந்திர போஸ்.
 நேதாஜியின் மற்றொரு குடும்ப உறுப்பினரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான கிருஷ்ணா போஸ் கூறுகையில், "ரகசிய ஆவணங்களை வெளியிட்டு, துணிச்சலான நடவடிக்கையில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அவரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது; இதுபோல் மத்திய அரசும் தன்னிடமிருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும்' என்றார்.
 பின்னணி: இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் ஓரணியாகவும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகள் மற்றொரு அணியாகவும் போரிட்டன. இதில், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் உதவியுடன் இந்தியாவுக்கு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று தரும் முயற்சியில் நேதாஜி ஈடுபட்டார்.
 இதற்காக ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் உதவியுடன் வெளிநாட்டில் இருந்த இந்தியர்களைத் திரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ.) உருவாக்கி, பிரிட்டனுடன் நேதாஜி போரிட்டார். இந்நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகள் தோல்வியடையவே, நேதாஜியின் முயற்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டது.
 முடிவில், பிரிட்டனின் கைகளில் சிக்காமல் இருப்பதற்கு அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கு விமானம் மூலம் நேதாஜி கடந்த 1945ஆம் ஆண்டு தப்பிச் சென்றார். அப்போது நேதாஜி சென்ற விமானம் தைவான் நாட்டில் விபத்துக்குள்ளானதாகவும், இதில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை நேதாஜியின் ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் நம்ப மறுக்கின்றனர்.
 இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த ஆவணங்களை வெளியிட மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அவற்றை வெளியிட்டால், சில நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
 மத்திய அரசும் வெளியிட மம்தா வலியுறுத்தல்
 மேற்கு வங்க அரசு வெளியிட்டதுபோன்று, மத்திய அரசும் தன்னிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
 கொல்கத்தாவில் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள காவல் துறை அருங்காட்சியகத்துக்கு மம்தா வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
 ஆவணங்களில் சில கடிதங்களும் உள்ளன. அவற்றில், 1945ஆம் ஆண்டுக்குப் பிறகும் நேதாஜி உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
 அந்த ஆவணங்களை முழுவதும் படித்துப் பார்க்க எனக்கு நேரமில்லை. சிலவற்றைப் படித்தேன். 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு சில தகவல்களை இடைமறித்து எழுதப்பட்ட கடிதங்கள், ஆவணங்களைப் படித்தேன். அவை, நேதாஜியின் குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டதை சூசகமாகத் தெரிவிக்கின்றன.
 நேதாஜிக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவில்லை. இது துரதிருஷ்டவசமானதாகும். எத்தனை காலத்துக்கு இதை ரகசியமாக நீங்கள் வைத்திருப்பீர்கள்? நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் இதுவொரு தொடக்கமாகும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். மத்திய அரசும் தன்னிடமிருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றார் மம்தா.

No comments:

Post a Comment