WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, December 1

தண்டிப்பதா? கண்டிப்பதா??



சேலம்மாவட்டச் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் 16/11/2013-ல் நடைபெற்றதாகவும் அதில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று தோழர்.சி.கே.மதிவாணன் அவர்களை வன்மையாக கண்டித்ததாகவும் புதிதாக துவக்கப்பட்ட சேலம் மாவட்ட சங்க இணையதளத்தின் மூலம் அறிந்தோம்.

உண்மையான விபரங்களை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இதை நாங்கள் எழுதுகிறோம். தற்போது தமிழ் மாநிலச் சங்கத்தின் தலைவராக இருக்கும் தோழர்.ஹெச்.நூருல்லா 16/11/2013 வரை சேலம் மாவட்டச் செயலாளராக சர்வ அதிகாரத்துடன் செயல்பட்டவர் என்பதை தமிழ் நாட்டுத் தோழர்கள் நன்கு அறிவார்கள்.அவர் மாவட்டச் சங்கத்திற்காக ஏற்கெனவே வாங்கப்பட்டிருந்த ஒரு நிலத்தை விற்று எருமைப்பாளையம் என்ற கிராமத்தில் 4043 சதுர அடிக்கு நிலத்தை டிசம்பர்-2009ல் வாங்கியதாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர் இந்த நிலம் சம்பந்தமாக முடிவு எடுப்பதற்கும், நிலத்தில் சங்க கட்டிடம் கட்டுவதற்கு முடிவு எடுக்கவும்  ஐவர்குழு ஒன்று அமைக்கப்பட்டது. தோழர்.நூருல்லா யாருக்கும் தெரியாமல்;ஐவர் குழுவுக்கும் கூடச் சொல்லாமல் கள்ளத்தனமாக மேற்படி நிலத்தில் 2015 சதுர அடியை பிரித்து தனது பெயரில் 19/2/2010-ல் பத்திரபதிவு செய்து கொண்டார். இது ஒரு நம்பிக்கை துரோகமான செயல் என்பதுமட்டுமல்ல அப்பட்டமான மோசடி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

தொழிற்சங்கத்திடமிருந்து தோழர்.நூருல்லா தன் பெயருக்கு இவ்வாறு கபளீகரம் செய்த 2015 சதுர அடி நிலத்தின் மதிப்பு சுமார் 20 லட்சங்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.இது குறித்து சேலம்மாவட்டச் செயற்குழுவில் பல முன்னணித் தோழர்கள்  கடந்த இரண்டு வருடங்களாக விவாதிக்க வற்புறுத்தியும் தோழர்.நூருல்லா  தந்திரங்கள் பல செய்து இந்த நிலமோசடி குறித்து விவாதம் நடத்த முன்வரவில்லை. எனவே வேறு வழியின்றி 2/08/2013 ல் சேலம்மாவட்டத்தின் முக்கிய தோழரும் தமிழ் மாநிலத் துணைத் தலைவருமான பி.ராசா பகிரங்கமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு ஊழியர்களிடம் அதை விநியோகிக்கவும் செய்தார்.

இதன் பின்னரும் தோழர்.நூருல்லாவின் மவுனம் தொடர்ந்துதான் மர்மம்.இதை தொடர்ந்து நமது சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் நான்குபேர் ”மவுனம் ஏன்” என்ற தலைப்பில் இதே விஷயத்தை ஊழியர்களிடம் அறிக்கையாக கொண்டு சென்றனர்.  ஆனாலும் “திருடனுக்கு தேள் கொட்டினால் சத்தமிட்டு கதற முடியாது” என்பது  போல தோழர்.நூருல்லாவும் அவரது நண்பர்களும் கள்ள மவுனம் சாதித்தனர்.

நேர்மைக்குப் புகழ்பெற்ற தோழர்.பட்டாபிராமன் தமிழ் மாநிலச் செயலாளராக இருக்கும்போதே இப்படிபட்ட மோசடிகள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் மூடிமறைக்க முயற்சிகள் நடந்ததுதான் இந்த திடுக்கிடும் கதையில் எதிர்பாராத திருப்பம்.இதுதவிர பல முன்னாள் மாநிலச் செயலாளர்கள், மாநிலப் பொருளாலர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் சேலத்தில் முகாமிட்டு இந்த மோசடியை மூடி மறைக்கவும் தோழர்.நூருல்லாவை காப்பாற்றவும் படாதபாடு பட்டனர். அவர்களின் மேலான ஆலோசனைப்படிதான் தோழர்.நூருல்லா 04/11/2013-ல் விருப்ப ஓய்வில் வெளியேறிவிட்டார். இத்தகைய சோதனை காலத்தில் சேலத்தில் உள்ள பல முக்கிய தோழர்கள் சம்மேளத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர்.சி.கே.மதிவாணனிடம் இந்த மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை  எடுக்க கோரினர். அவரும் தனது பொறுப்பை தட்டிக் கழிக்காமல் காவல் துறையில் இதுகுறித்து 15/10/2013-ல் புகார் மனு அளித்தார். NFTE-BSNL சங்கத்திற்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம் ஒரு நபரால் களவாடப்பட்டது குறித்து அக்கறையுடன் காவல் துறையில் புகார் அளித்த காரணத்திற்காக தோழர்.சி.கே.மதிவாணனை சேலம்மாவட்டச் செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டித்திருக்கிறது.

நிலம் மோசடி மட்டுமல்லாமல் இதுகாறும் வசூலான பல லட்ச ரூபாய்க்குப் கணக்கு எதையுமே காட்டாத பழக்கத்தில் இருந்தவர்தான் தோழர்.நூருல்லா.அவர் திடுதிப்பென ஒரு போலிக் கணக்கை; பொய்யான கணக்கை 16/11/2013-ல் சமர்பித்ததும் அதனை அந்த மாவட்டச் செயற்குழு ஒப்புக் கொண்டதாக அறிவித்திருப்பதும் மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை.

தமிழ் நாட்டின் மாநிலச் சங்கத்திற்கு எத்தனையோ உத்தமர்கள் தலைமை தாங்கி வழி நடத்தி இருக்கிறார்கள். இன்று காலம் செய்த கோலம் நிலமோசடிக்காரர்; சங்கப் பணத்தை சுருட்டியவர்; பொய் கணக்கை சமர்ப்பித்தவர் மாநிலச்சங்கத்தின் தலைவர் பொறுப்பில் வீற்றிருக்கிறார். தவறுகளை சுட்டிக்காட்டிய பிறகும் தவறுக்கு துணைபோகும் தவறினை சேலம்மாவட்டச் சங்கம் தொடர்ந்தால் அது  NFTE-BSNL புகழ்மிக்க பாரம்பரியத்திற்கு பெரும் அவமானத்தையே தேடித் தரும்.எனவே மிகுந்த அடக்குத்துடன் நாங்கள் அந்த மாவட்டச் சங்க தலைமைக்கு விடுக்கும் வேண்டுகோள் இதுதான். தோழர்.சி.கே.மதிவாணனை கண்டிப்பதை விட்டுவிட்டு தவறிழத்த தோழர்.நூருல்லாவை தண்டிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

வெளியீடு: காஞ்சி மாவட்டச் சங்கம், சென்னை தொலைபேசி மாநிலம்,.
NFTE வட சென்னை மாவட்டம்

No comments:

Post a Comment